ஊழியர்களுக்கு பஸ் வசதி வேண்டுமா... மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு

பஸ் வசதி வேண்டுமா?... இதோ உங்களுக்காக! ஊழியர்களுக்கு பேருந்து வசதி வேண்டும் என்பவர்கள் அணுகலாம் என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு தளர்வின் அடிப்படையில் அரசு பணியாளர்கள் 50% பேர் பணிக்கு வர வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி மே 18 முதல் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

தனியார் நிறுவனங்களும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அலுவலகங்கள் இயங்கினாலும் ஊழியர்கள் செல்ல ரயில் மற்றும் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று பரவலாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் இதற்கு தீர்வு காணும் விதமாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது பேருந்து சேவை தேவைபடும் பட்சத்தில் வேலைக்கு செல்வோர் தங்களை அணுகலாம் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி 9445030523 என்ற எண்ணிலும், edp.mtc@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் அணுகலாம் என மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இந்த சேவை தனியார் ஊழியர்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.