மதுரை வழியாக ரயில்கள் மீண்டும் பழையபடி இயக்கம்

சென்னை: முடிவுக்கு வந்த ரயில் பயண அவதி .... கடந்த ஒரு மாத காலமாகவே மதுரை ரயில்வே கோட்டத்தில் நடந்து வந்த பணிகளால் மாற்றப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட மதுரை – திருமங்கலம் இடையே இரட்டை அகலப்பாதை தண்டவாள இணைப்பு பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக மதுரை வழியே செல்லும் ரயில்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன.

இதனை அடுத்து ரயில்களின் நேரம் மாற்றம், ரயில்கள் ரத்து மற்றும் செல்லும் வழித்தடம் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் பயணிகள் குழப்பமடைந்ததுடன், ரயில் பயணமும் பெரும் அவதிக்குரியதாகயிருந்தது.

இந்த நிலையில் தண்டவாள பணிகள் முழுவதுமாக நேற்றுடன் முடிவடைந்துள்ளன. இதனால் இதுவரை மாற்றப்பட்ட நேரம் மற்றும் வழித்தடத்தில் இயங்கி வந்த ரயில்கள், ரத்து செய்யப்பட்ட ரயில்கள் அனைத்தும் பழையபடி வழக்கமான வழித்தடத்தில், வழக்கமான நேரத்தில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தென் மாவட்ட பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.