மீனவர்களுக்காக உயர்த்தப்பட்ட தடை கால நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் மீனவர்களுக்காக உயர்த்தப்பட்ட தடை கால நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

புதுவை அரசு மீன்வளத்துறை மூலம் ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரத்து 500 வழங்கப் படும். இந்த தொகையை ரூ.6 ஆயிரத்து 500 ஆக உயர்த்தி 18 ஆயிரத்து 298 மீனவ குடும்பங்களுக்கு ரூ.11 கோடியே 89 லட்சத்து 37 ஆயிரம் வழங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த உயர்த்தப்பட்ட தடை கால நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி சட்டசபையில் நடந்தது. முதல்-அமைச்சர் ரங்கசாமி மீனவர்களுக்கு தடைகால நிவாரணம் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மீன்வளத்துறை செயலர் நெடுஞ்செழின், இயக்குனர் பாலாஜி, இணை இணை இயக்குனர் தெய்வசிகாமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த தொகையை புதுவையில் 9 ஆயிரத்து 355, காரைக்காலில் 3 ஆயிரத்து 380, ஏனாமில் 5 ஆயிரத்து 48 குடும்பங்கள் என மொத்தம் 17 ஆயிரத்து 763 குடும்பங்களுக்கு அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

மாகி பகுதியை சேர்ந்த 515 மீனவ குடும்பங்களுக்கு வருகிற ஜூன் முதல் வாரம் இந்த தொகை வங்கியில் செலுத்தப்பட உள்ளது.