ஈரோடு வேட்பாளராக களம் இறக்கப்பட்டார் இபிஎஸ் அணியின் தென்னரசு

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடப் போவதாக இபிஎஸ் அறிவித்துள்ளார்.


ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டு பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதிமுக வேட்பாளர் அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. மேலும், ஒரே கட்சியில் இரண்டு வேட்பாளர்களை நிறுத்த எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் திட்டமிட்டனர்.

இப்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடப் போவதாக இபிஎஸ் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ம் தேதி நடக்கிறது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகிறது.தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்கி பிப்ரவரி 7ம் தேதி வரை நடக்கிறது.

முதல் நாளில் 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதற்கிடையே இடைக்கால தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் களம் இப்போதே சூடுபிடித்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.


அதேபோல் தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக முடிவு செய்தது.

ஆனால் பா.ஜ.கவுடன் கூட்டணி இன்னும் முடிவாகாததால் வேட்பாளர் அறிவிப்பு தாமதமானது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு போட்டியிடுவார் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தென்னரசு 2016 ம் ஆண்டு இதே தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்வானார்.