போர் விமானத்தை இணைந்து இயக்கும் தந்தை - மகள்.. இந்திய விமானப்படை வரலாற்று சாதனை!

டெல்லி: இந்தியாவில் விமானப் படையை சேர்ந்த தந்தையும், மகளும் ஒன்றாக இணைந்து போர் விமானத்தை இயக்கி புதிய வரலாற்று சாதனை படைத்திருக்கின்றனர்.ஏர் காம்மொடோர்(Air Commodore) சஞ்சய் ஷர்மா, அதிகாரி அனன்யா ஷர்மா ஆகிய இருவரும் இந்திய விமானப்படையில் அதிகாரிகளாக பணி புரிந்து வருகின்றனர்.

மே 30, 2022 அன்று, கர்நாடகத்தில் பிடாரில் உள்ள இந்திய விமானப்படை நிலையத்தில் 'ஹாக்-132 போர்' விமானத்தில் இவர்கள் இருவரும் ஒன்றாக பறந்தனர். இதுவரை இந்தியாவில் எந்தவொரு தந்தையும், மகளும் ஒன்றாய் போர் விமானத்தை இயக்கியது கிடையாது என தகவல் வெளியாகி இருக்கிறது. இந்திய விமானப்படை வரலாற்றில் தந்தை-மகள் இணைந்து போர் விமானத்தை இயக்கி வரலாறு படைத்துள்ளனர்.

பிடார் இந்திய விமானப்படை நிலையத்தில் அனன்யா ஷர்மா பயிற்சி பெற்று வருகிறார். அனன்யா ஷர்மா சிறு வயதிலிருந்தே தனது தந்தையின் பணிகளை உன்னிப்பாக கவனித்து வந்தார். இதனால் இந்த துறை மீது இவருக்கு அதீத ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.

அனன்யா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பிரிவில் பிடெக் முடித்துள்ளார். இவர் 2016-ம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்ந்து, கடந்த டிசம்பர் 2021 இல் போர் விமானியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.