முதல் திருமணத்தை மறைத்து இரண்டாம் திருமணம்...4 குழந்தைகளின் தந்தை கைது

கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் அக்பர் அலி (வயது 42). இவர் பிளாஸ்டிக் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் அக்பர் அலிக்கு தனது கம்பெனியில் வேலை செய்யும் குறிஞ்சி நகரை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

அப்போது அவர் தனது முதல் திருமணத்தை மறைத்து அந்தப் பெண்ணை காதலிப்பதாக கூறினார். இதையடுத்து இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் அக்பர் அலி அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்ததால் அந்த இளம்பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சம்பவத்தன்று கம்பெனியில் அக்பர் அலி செல்போனில் வெகுநேரமாக பேசிக் கொண்டிருந்தார்.

சந்தேகம் அடைந்த அந்த இளம்பெண் இது குறித்து அவரிடம் கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர் முதல் திருமணம் செய்து கொண்டதை கூறி அந்த இளம்பெண்ணை தாக்கினார். இதனால் மனவேதனை அடைந்த இளம்பெண் சாணி பவுடரை குடித்து மயங்கி விழுந்தார்.

இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து அந்த இளம்பெண் போலீசில் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அக்பர் அலியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.