ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கின் 2000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்

உத்தரபிரதேச மாநிலம், ஹத்ராஸ் நகர் அருகே உள்ள சிறிய கிராமத்தில், பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் தேதி, உயர்சாதி வகுப்பைச் சேர்ந்த நான்கு நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். துப்பட்டாவால் கழுத்து நெரிக்கப்பட்டதால் அந்தப் பெண்ணின் தண்டுவடத்தில் அடிபட்டு படுத்த படுக்கையானார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக டெல்லி அழைத்து சென்றும், சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். இளம்பெண்ணின் உயிரிழப்பிற்கு காரணமான 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அதேசமயம், பெண்ணின் உடலை பெற்றோரிடம் கூட காட்டாமல் அவசரகதியில் உ.பி. போலீசார் எரித்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர் அழுத்தங்கள் காரணமாக, இவ்வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நால்வருக்கும் எதிராக, சிபிஐ வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியது. சம்பவம் நடந்த வயல்வெளிக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்த சிபிஐ அதிகாரிகள், சம்பவம் நடந்த அன்று அப்பகுதிக்கு முதலில் சென்று பார்த்த 2 இளைஞர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் சாட்சியாக சேர்க்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையின் முடிவில் 2000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை, ஹத்ராசில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட 4 பேருக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த குற்றப்பத்திரிகையில், அந்த இளம்பெண் கற்பழிக்கப்பட்டதும், கொடூரமாக தாக்கப்பட்டதால் உயிரிழந்ததையும் சிபிஐ உறுதி செய்துள்ளது. ஜனவரி 4ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.