முகக்கவசம் அணியலையா அப்போ அபராதம் ரூ.50 ஆயிரம் வரை; ஸ்பெயின் அரசு அதிரடி

ஸ்பெயினில் நாளை முதல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அப்படி முக கவசம் அணியாதவர்களுக்கு இந்திய மதிப்பில் ரூ 8,000 முதல் 50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் உலக அளவில் ஸ்பெயின் 3வது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2,78,803 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 27,778 பேர் பலியாகி உள்ளனர்.


கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டுள்ளது. எனவே கடந்த சில நாட்களாக வீட்டிற்குள் முடங்கியிருந்த மக்கள் வெளியே நடமாடத் துவங்கி உள்ளனர். இதையடுத்து கொரோனா பரவல் மேலும அதிகரிப்பதை தடுக்கும் விதமாக அந்நாட்டு அரசு, 6 வயது முதல் அனைத்து வயது மக்களும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் வலியுறுத்தி உள்ளது.

சமூக விலகலை கடைப்பிடிக்க முடியாத பொது இடங்களில் முக கவசம் அவசியமாகிறது. முக கவசம் அணியாதவர்களுக்கு இந்திய மதிப்பில் ரூ 8,000 முதல் 50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.