மத்திய பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை

மத்திய பிரதேசத்தின் திகம்கார்க் மாவட்டம் கார்காபூரை சேர்ந்த தர்மதாஸ் சோனி என்பவர் மாநில அரசின் கால்நடைத்துறை அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது மனைவி பூணா, மகன் மனோகர் மற்றும் மருமகள் சோனம், 4 வயது பேரக்குழந்தையுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்தார்.

நேற்று காலை வெகு நேரமாக தர்மதாசின் வீட்டு கதவு திறக்கப்படவில்லை. மேலும், வீடு உட்புறமாக பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ஒரு அறையில் தர்மதாஸ், அவரது மனைவி, மருமகள் மற்றும் பேரக்குழந்தையும் தூக்குப்போட்டு இறந்த நிலையில் கிடந்தனர்.

மற்றொரு அறையில் அவரது மகன் மனோகர் தூக்கில் பிணமாக தொங்கினார். முதல்கட்ட விசாரணையில், தர்மதாஸ் சமீபத்தில் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை விற்று பணம் வைத்துள்ளார். தான் ஒரு கடையை வாங்க இருப்பதால் பணத்தை மனோகர் கேட்டதாக தெரிகிறது. ஆனால் இதற்கு தர்மதாஸ் மறுத்து விட்டார். இதனால் 5 பேரும் தற்கொலைசெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பணத்தகராறில் 5 பேரும் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு எதுவும் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.