சதுரகிரி கோவிலுக்கு செல்லும் வழியில் காட்டுத்தீ... 3 ஆயிரம் பக்தர்கள் தவிப்பு

விருதுநகர்: சதுரகிரி கோவிலுக்கு செல்லும் வழியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் 3 ஆயிரம் பக்தர்கள் பரிதவித்து வருகின்றனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே 4500 அடி உயரத்தில் அமைந்துள்ள சதுரகிரி கோவிலுக்கு செல்லும் வழியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயில் மலைப்பகுதியிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று ஆடி மாத பிறப்பு அமாவாசை தினத்தை முன்னிட்டு சுமார் 13 ஆயிரம் பக்தர்கள் கோயிலுக்கு சென்று சதுரகிரி சுந்தர மகாலிங்கத்தை வழிபட்டனர். பின்னர் அவர்கள் மலைப்பகுதியில் தங்க அனுமதி இல்லாததால் கீழே இறங்கினர். அப்போது மாலை 6 மணி அளவில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் நாவல் ஊத்து பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டது.

இதில் பக்தர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும், தீயை அணைக்க 30க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மலை பகுதிக்கு சென்றுள்ளதாகவும் வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.