வரும் 5ம் தேதி வரை அம்மா உணவகத்தில் விலையில்லா உணவு

வரும் 5ம் தேதி வரை விலையில்லா உணவு... பொது முடக்கம் அமலில் உள்ள பகுதிகளில் செயல்படும் அம்மா உணவகங்களில் ஜூலை 5ம் தேதி வரை விலையில்லா உணவு வழங்க முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்பு, ஏழை ஏளிய மக்களின் நலன் கருதி, அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவு விலையில்லாமல் 30.6.2020 வரை வழங்கப்பட்டு வந்தது. சென்னை பெருநகர காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் மற்றும் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளிலும் தீவிர ஊரடங்கு 19.6.2020 முதல் 30.6.2020 வரை அமல்படுத்தப்பட்டதால், இப்பகுதிகளில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களிலும் விலையில்லாமல் உணவு வழங்க நான் உத்தரவிட்டிருந்தேன்.

மேற்கண்ட பகுதிகளில் 5.7.2020 வரை தீவிர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், இப்பகுதிகளில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களிலும் விலையில்லாமல் உணவு வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இக்காலக்கட்டத்தில், இப்பகுதிகளில் உள்ள சமுதாய சமையல் கூடங்களை மேலும் வலுப்படுத்தி, போதுமான அளவு உணவு சமையல் செய்து, இந்த உணவை, விலையில்லாமல், தேவைப்படும் முதியோர், நோயுற்றோர் மற்றும் ஆதரவற்றோர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கவும் நான் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நாளை (1.7.2020) முதல் 5.7.2020 வரை செயல்பாட்டில் இருக்கும்.