பொங்கலில் குவிந்த குப்பைகள்... 235 டன் சென்னையிலிருந்து அகற்றம்

சென்னை: சென்னையில் 235 டன் கழிவுகள் அகற்றப்பட்டுளள்ன என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் 235 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. மெரினா கடற்கரையில் மட்டும் 50 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, காலை முதலே பொழுதுபோக்கு பூங்காக்கள், கடற்கரைகள், சுற்றுலா தலங்களில் மக்கள் குவிந்தனர். காலை முதலே மக்கள் கூட்டம் கூட்டமாக மெரினா கடற்கரைக்கு வரத் தொடங்கினர். மாலையில் மணற்பாங்கான பகுதியே தெரியாத அளவுக்கு மக்கள் குடும்பத்துடன் திரண்டனர்.

இந்நிலையில் கடற்கரைக்கு வந்த குடிமகன்கள் திரும்பும் போது குப்பைகளை அங்கேயே போட்டுவிட்டு சென்றனர். இதனால் கடற்கரை முழுவதும் குப்பைகள் நிறைந்து காணப்பட்டது. இதையடுத்து நேற்று இரவு முதல் மெரினா கடற்கரையில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

அதிகாலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குப்பைகளை அகற்றினர். வழக்கமாக மெரினா கடற்கரையில் ஒரு நாளில் 10 டன் குப்பைகள் குவியும். ஆனால் பொங்கல் பண்டிகையையொட்டி 5 மடங்கு அதிகரித்து ஒரே நாளில் 50 டன் குப்பை சேகரமாகிறது.