குடும்ப அட்டைதாரர்களுக்கு தீபாவளி பரிசு வழங்க அரசு முடிவு?

தீபாவளி பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 பரிசு கொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் மக்களின் வாழ்வாதாரம் பெரியளவில் முடங்கியுள்ளது. இதனால் இந்தாண்டு தீபாவளி கொண்டாட மக்களிடம் பணம் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் அரசு இழப்பீடு கொடுத்து உதவ வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதனை ஏற்று தீபாவளி பண்டிகையையொட்டி அரசு சிறப்பு பரிசு வழங்க தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பொங்கல் பண்டிகையின்போது இலவச வேஷ்டி, சேலை, கரும்பு உள்ளிட்ட தொகுப்புகளுடன் ரேசன் கடைகள் மூலம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோன்று ரேசன் கடைகள் மூலம் தீபாவளிக்கு நிதி கொடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு ஏற்கனவே ஏப்ரல் மாதம் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா 1,000 ரூபாய் நிவாரணத் தொகையாக தமிழக அரசு அறிவித்து வழங்கியது.

எனவே மக்கள் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடவும், வாழ்வாதாரத்தை மீட்கவும் 2 ஆயிரம் ரூபாய் வழங்க அரசு ஆலோசனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் நிதி வழங்கப்படுமா என்பது அரசு முறைப்படி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில் அடுத்தாண்டு தேர்தல் வரவுள்ள நிலையில் 2 ஆயிரம் ரூபாய் நிதி கொடுக்க அரசு முயற்சிக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதுவும் மக்களை கவரும் நடவடிக்கையில் ஒன்றாக கருதப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.