சென்னை: இவர்கள்தான் காரணம்... நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சி அமைந்ததற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்தான் காரணம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மற்ற மாநிலங்களைவிட அனைத்து துறைகளிலும் முன்னோக்கி சென்றுகொண்டிருக்கிறோம். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சி அமைந்ததற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்தான் காரணம். திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என தெரிவித்தேன்.
போராட்டக் காலத்தை பணிக்காலமாக வரைமுறைப்படுத்தி அளிக்கப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பழிவாங்கப்பட்டனர்.
அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை 9 மாதங்களில் இருந்து 12
மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் சில கோரிக்கைகளை
நிறைவேற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளேன். தற்காலிக பணியில்
இருக்கும் ஆசிரியர்கள் 60 வயது வரை பணியை தொடரலாம்.
அக்டோபர்
15 முதல் அரசு ஊழியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக
வெளிப்படைத்தன்மையுடன் நடக்கும். பள்ளி கல்வி துறையை சீரமைக்க கொண்டு
வரப்பட்ட அரசாணையில் சில மாற்றங்கள் கொண்டு வந்து இருக்கிறோம்.
கல்வி
துறையில் கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிர்வாக பணிகளை மேற்கொள்ள
அதிகாரிகள் நியமிக்கப்படுவர். துறை அமைச்சர்களிடம் தெரிவிக்கப்படும்
கோரிக்கைகள் நிச்சயம் தன் கவனத்துக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.