2020 ஆம் ஆண்டிற்கான அரசாங்க செலவினம் ரூ. 3,085 பில்லியன்

2020 ஆம் ஆண்டிற்கான அரசாங்க செலவினம் 3,085 பில்லியன் ரூபாய் ஆகும், இது குறித்த விவரங்கள் அடுத்த மாதம் அரசாங்கம் முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இரண்டு ஒதுக்கீட்டுச் சட்டமூலங்கள் ஒன்றில் வெளிப்படும் என அறியமுடிகின்றது.

இந்த செலவினங்களில் நல்லாட்சி அரசாங்கத்தின் 2019 ஆம் ஆண்டிற்கான கடன்களும் அடங்கும் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க கூறியுள்ளார். 2019 முதல் நல்லாட்சி அரசு தீர்வு காணாத கடன் உட்பட அதன் வட்டி மற்றும் கடன் தவணைகளையும் உள்ளடக்கியது என்றும் இது சுமார் 2,000 பில்லியன் ரூபாய் ஆகும் என மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த மாதம் இரண்டு வரவு செலவுத் திட்டங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் கூறினார், அதில் ஒன்று 2020 ஆம் ஆண்டிற்கும் மற்றொன்று 2021 ஆம் ஆண்டிற்குமானது என்றும் தெரிவித்தார்.

2020 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் விவாதிக்கப்படாது என்றும் அரசாங்கம் எடுக்கும் முடிவுகளுடன் வெளிப்படையாக இருக்க மட்டுமே அதை முன்வைப்பதாகவும் 2021 ஒதுக்கீட்டு சட்டமூலம் விவாதிக்கப்பட்டு வழக்கம் போல் வாக்கெடுப்புக்கு விடப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் 2021 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கான செலவுகள் மற்றும் பிற விவரங்களை அமைச்சுக்கள் இன்னும் இறுதி செய்யவில்லை என்றும் தேவையான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.