திருக்கோவில்களில் திருமணம் செய்யும் மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு புத்தாடைகள் வழங்க......தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழகம்: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து கோயில்களிலும் இலவசமாக திருமணம் நடத்தும் திட்டத்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு 2021 – 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் “மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் திருக்கோயிலில் அவர்களுக்கு நடைபெறும் திருமணத்திற்கான கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. மேலும் திருக்கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால் மண்டபத்திற்கான பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்” என்ற அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டார்.

மேலும் அமைச்சரின் அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் துறையின் ஆளுகைக்குட்பட்ட அனைத்து திருக்கோயில்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம் நடைபெற்றால் அதற்கான கட்டணம் வசூலிக்கக் கூடாது.

மேலும், திருக்கோயில்களுக்கு சொந்தமான திருமண மண்டபங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம் நடைபெற்றால் பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் எனவும் அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டு தற்போது வரை மேற்படி அறிவிப்பு அனைத்து திருக்கோயில்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 2022-2023-ம் ஆண்டின் சட்டமன்ற பேரவையின் வரவு செலவு கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை விவாதத்தின் போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்தது போல , திருக்கோவில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் கட்டணம் ஏதுமின்றி திருக்கோயில் மண்டபங்களில் நடக்கும் திருமணங்களுக்கு வாடகையின்றி திருமணங்கள் நடத்த அனுமதிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ள திருமணங்களில் மணமக்களுக்கு புத்தாடைகள் திருக்கோயில் சார்பாக வழங்கப்படும் என்று தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.இது மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.