வகுப்புகளுக்கு வர அரசு பள்ளி மாணவர்களே அதிக ஆர்வம்

அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வருவதில் ஆர்வம் காட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 3ஆவது வாரம் முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. அடுத்தடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பள்ளி, கல்லூரிகள் மட்டும் திறக்கப்படாமல் இருந்தன.

பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டப்போதும் கல்வி தொடர்பான அறிவிப்பு இடம்பெறவில்லை. இதனால் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசு அளித்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி புதுச்சேரி மாநிலத்தில் முதல்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்பட்டனர்.

இரு குழுக்களாக பிரித்து வாரத்தில் 3 நாட்கள் மட்டும் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்துவது, பள்ளிகளுக்கு மாணவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும். வருகைப்பதிவேடு முறை பின்பற்றப்பட மாட்டாது என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. எனினும் தேவைப்பட்டால் பள்ளிகள் மூடப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி கூறியிருந்தார்.

இதையடுத்து 6 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாளில் 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் முகக்கவசம் அணிந்து ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர். அங்கு அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டனர். பின்னர் அவர்களிடம் இருந்து பெற்றோரின் ஒப்புதல் கடிதங்கள் பெறப்பட்டன.

உடல் வெப்பநிலையை கண்டறியும் கருவி மூலம் பரிசோதித்து விட்டு கிருமிநாசினி வழங்கி அதன்பிறகே வகுப்பறைக்குள் செல்ல மாணவர்களை ஆசிரியர்கள் அனுமதித்தனர். வகுப்பறையில் ஒரு பெஞ்சில் 2 பேர் அமர வைக்கப்பட்டனர். தற்போது தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளுக்கு தான் மாணவர்கள் ஆர்வமுடன் வந்ததாக கூறப்படுகிறது.