மருத்துவர்களுக்கான உரிய ஊதியத்தை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் என்பது குறித்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொரோனா, டெங்கு போன்று எத்தனை சவால்கள் வந்தாலும், தமிழகத்தில் உள்ள 18 ஆயிரம் மருத்துவர்கள்தான் போராடி வருகின்றனர்.
மருத்துவர்களின் உழைப்பை மட்டும் பயன்படுத்திக் கொண்டு, அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்க மறுப்பது எந்த வகையில் நியாயம்?. அரசு மருத்துவர்களுக்குத் தரப்படும் ஊதியம் என்பது, மக்களுக்கான, சுகாதாரத்துக்கான முதலீடு என்பதையும், அது செலவினம் அல்ல என்பதையும் அரசு புரிந்துகொள்ள வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில், உயிரையும் துச்சமென நினைத்து, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிக் கொண்டிருக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் அளிக்கப்பட வேண்டும் என்பதே, ஒட்டுமொத்த தமிழகத்தின் ஆசையாக இருக்கிறது. எனவே, 18 ஆயிரம் மருத்துவர்கள் இல்லாமல் சுகாதாரத்துறையை முன்னேற்றி இருக்க முடியுமா என்பதை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் மனசாட்சியுடன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
உயிர்காக்கும் மகத்தான பணியில் உள்ள மருத்துவர்கள் மனஉளைச்சலுடன் எப்படி பணியாற்ற முடியும்?. எனவே, இனியும் தாமதிக்காமல் மருத்துவர்களுக்கான உரிய ஊதியத்தைத் தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.