கோத்தகிரியில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் முகாம்

கோத்தகிரி:நீலகிரி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சுகாதாரத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் கோத்தகிரியில் நடந்தது.

முகாமை பொதுப்பணித்துறை நல அலுவலர் மலர்விழி துவக்கி வைத்தார். இதில், பொது மருத்துவர்கள், காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர்கள், கண், மனநல மருத்துவர்கள், எலும்பு, மூட்டு சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளின் ஊனம் சதவீதம் சரிபார்த்து சான்று வழங்கினர்.

முகாமில் புதிதாக 20 பழங்குடியினர் மாற்றுத்திறனாளிகள் உள்பட மொத்தம் 37 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 72 மாற்றுத்திறனாளிகளுக்கு பழைய அடையாள அட்டைக்குப் பதிலாக புதிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. முகாமில், மாற்றுத்திறனாளிகள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.