தான் வளர்க்கும் யானைகளுக்கு ரூ.5 கோடி மதிப்பு சொத்துக்கள் எழுதி வைத்தவர்

யானைகளுக்கு தன் சொத்தில் பாதியை எழுதி வைத்துள்ளவரை கண்டு நாடே வியந்து போய் பார்க்கிறது. இது நடந்துள்ளது பீஹாரில்தான்.

வளர்க்கும் யானைகள் மீதான பாசத்தால், தனது சொத்தில் பாதியை அவற்றிற்கு பீஹாரை சேர்ந்தவர் எழுதி வைத்துள்ளார். பீஹாரை, சேர்ந்தவர் அக்தர் இமாம். இவர் ஆசிய யானை மறுவாழ்வு மற்றும் வன விலங்கு டிரஸ்ட் தலைமை நிர்வாகியாக உள்ளார். இவருக்கு சிறு வயது முதலே யானைகள் மீது பிரியம் அதிகம்.

இதனால், இவர் இரண்டு யானைகளை வளர்த்து வருகிறார். அவற்றிற்கு மொடி மற்றும் ராணி என பெயர் வைத்து, தனது குடும்பத்தினரை போல் கவனித்து கொள்கிறார்.

அவருக்கு மனைவி மற்றும் மகன்கள் உள்ளனர். ஆனால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அனைவரும் தனியே சென்று விட்டனர். அக்தர் இமாம் மட்டும் யானைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், தனது சொத்தில் பாதியை யானைகள் பெயரில் அக்தர் எழுதி வைத்துள்ளார்.

அவரது பெயரில் உள்ள ரூ.10 கோடி மதிப்புள்ள சொத்துகளில் 5 கோடியை மனைவி மற்றும் மகன்கள் அனுபவித்து வரும் நிலையில் எஞ்சிய 5 கோடி ரூபாய் சொத்தை யானைகள் பெயரில் அக்தர் எழுதி வைத்துள்ளார். யானைகள் மறைவிற்கு பிறகு அறக்கட்டளைக்கு, அந்த சொத்துகள் சென்று விடும் எனக்கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் என்னை கொலை செய்ய முயன்றனர். ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்து தாக்க முயன்றனர். ஆனால் யானைகள் சத்தம் போட்டு எழுப்பின. இதனால், நான் தப்பித்தேன். சமூக விரோதிகள் ஓடிவிட்டனர். எனது மகன் என் மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறி போலீசில் புகார் அளித்து சிறையில் அடைத்தார். ஆனால், குற்றச்சாட்டுகள் பொய் என நான் நிரூபித்ததும் அவர்கள் பிரிந்து சென்று விட்டனர்.

எனது மகன், யானையை கடத்தல்காரர்களிடம் விற்க முயன்றார். ஆனால் பிடிபட்டு கொண்டார். யானைகளின் பெயரில் சொத்தை எழுதி வைத்ததால், குடும்பத்தினரிடம் இருந்து எனக்கு அச்சுறுத்தல் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.