பேராவூரணியில் பெய்த கனமழை: வெப்பம் தணிந்து குளிர்காற்று வீசியது

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை ஒரு மணி நேரம் மழை பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி உட்பட பல பகுதிகளில் கோடை முடிந்த நிலையிலும் கடந்த வாரம் முழுவதும் அனல் காற்று வீசி வந்தது. இதனால் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் நடமாட்டம் இன்றி கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது.

இந்நிலையில் நேற்று மாலை ஒரு மணி நேரம் மழை பெய்தது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நகர் பகுதி மற்றும் கொன்றைக்காடு, ஒட்டங்காடு, படப்பனார்வயல், மணக்காடு, பூக்கொல்லை, ரெட்டவயல், பெருமகளூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இடி மின்னலுடன் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.

இதனால் குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த ஒரு வாரமாக இருந்து வந்த வெப்பம் இந்த மழையால் தணிந்தது.