கோவை மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை

தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் வெப்பசலனம் காரணமாக கோடை மழை பெய்து வருகிறது. மேலும் ஒரு சில இடங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் சில சேதங்களையும் சந்தித்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மேட்டுப்பாளையம், நெல்லித்துறை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை 6 மணியளவில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

நெல்லித்துறை பகுதியில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழைக்கு அங்கிருந்த 10-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர் ஆகியவை சாய்ந்து விழுந்தன. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர். அங்கு மின் கம்பங்கள் சரி செய்யும் பணி நடந்து வருகிறது.

சிறுமுகை, காரமடை, பல்லடம் பகுதிகளில் சூறாவளி காற்றால் அறுவடைக்கு தயாராக இருந்த 2000-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சரிந்து நாசமடைந்தன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.