மருத்துவக் கட்டணம் 300 ரூபாய் கட்டவில்லை...நோயாளியை அடித்து கொலை செய்த மருத்துவமனை ஊழியர்கள்

உபி மாநிலத்தில் 300 ரூபாய் கட்டணம் கட்டவில்லை என்பதற்காக நோயாளி ஒருவரை மருத்துவமனை ஊழியர்களே அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் பகுதியைச் சேர்ந்த மருத்துவமனைக்கு சமீபத்தில் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்து போகும்போது ரூ.4000 மருத்துவக் கட்டணம் கட்ட வேண்டும் மருத்துவ ஊழியர்கள் கூறினார்கள். ஆனால் மருத்துவ கட்டணத்தில் ரூ.300 எண்ட்ரி கட்டணம் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், அந்த பணத்தை கட்ட முடியாது என்றும் ரூ.3700 தான் கட்ட முடியும் என்றும் நோயாளி உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் மருத்துவமனை ஊழியர்களுக்கும் நோயாளியின் உறவினர்களுக்கும் இடையே சண்டை வந்தது. இதனை அடுத்து மருத்துவமனை ஊழியர்கள் நோயாளியையும் அவருடைய உறவினர்களையும் கம்பால் அடித்துள்ளனர். இதில் படுகாயமடைந்த நோயாளி உயிரிழந்துள்ளார். மற்றவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.