இறப்பு என்னை தழுவும் வரை அரசியலில் ஈடுபட மாட்டேன்- தமிழருவி மணியன்

கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை நடிகர் ரஜினிகாந்த் நேற்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை தொடர்ந்து தமிழருவி மணியனும் அரசியலில் ஈடுபட போவதில்லை என அறிவித்துள்ளார்.

அரசியல் கட்சி தொடங்குவேன் என அறிவித்திருந்த நடிகர் ரஜினிகாந்த், தமிழருவி மணியனை மேற்பார்வையாளராக நியமித்திருந்தார். இந்நிலையில் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்காததை அடுத்து தமிழருவி மணியனும் அரசியலிலிருந்து விலக போவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழருவி மணியன் கூறியிருப்பதாவது:- இறப்பு என்னை தழுவும் வரை இனி நான் அரசியலில் ஈடுபட மாட்டேன். மாணிக்கத்திற்கும் கூழாங்கற்களுக்கும் பேதம் தெரியாத அரசியல் உலகில் இனி நான் சாதிக்க ஒன்றும் இல்லை. தி.மு.க.வில் இருந்து விலகும் போது கண்ணதாசன் போய் வருகிறேன் என்றார்; நான் போகிறேன்; வரமாட்டேன்.

இரண்டு திராவிடக் கட்சிகளால் தமிழகத்தின் பொதுவாழ்க்கைப் பண்புகள் பாழடைந்துவிட்டன. மக்கள் நலன் சார்ந்த மேன்மையான மாற்று அரசியல் இந்த மண்ணில் மலர வேண்டும் என கனவு கண்டேன். காமராஜர் ஆட்சியை தமிழகம் தரிசிக்க வேண்டும் என்ற கனவை நனவாக்க தொடர்ந்து முயன்றதுதான் குற்றம் என அவர் கூறியுள்ளார்.