சத்துமாவில் தலைக்கு தேய்க்கும் தேங்காய் எண்ணெய் கலந்து சாப்பிட்ட 6 மாணவர்கள் உடல்நிலை பாதிப்பு

சென்னை: மாணவர்கள் உடல்நிலை பாதிப்பு... சென்னை தி. நகரில் தலையில் பொடுகை போக்குவதற்காக பயன்படுத்தும் எண்ணெய் கலந்த உணவை சாப்பிட்ட மாணவர்கள் ஆறு பேர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தி. நகர் வடக்கு போக் சாலையில் உள்ள அரசு உதவி பெறும் மாணவர் விடுதியில் தங்கிப் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஒருவர் தமது ஊரில் இருந்து கொண்டு வந்த சத்துமாவை தேங்காய் எண்ணெய் கலந்து சாப்பிடலாம் என்று நண்பர்களிடம் யோசனை கூறியதாக தெரிகிறது.

அப்போது சக மாணவர் ஒருவர் தமது தலைக்கு பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொடுத்துள்ளார். அந்த எண்ணெயில் பொடுகை போக்குவதற்கான மருந்து எண்ணெய் கலந்து இருந்தது தெரியாமல் சத்துமாவுடன் கலந்து சாப்பிட்ட மாணவர்கள் 6 பேர் சிறிது நேரத்திலேயே மயக்கமடைந்தனர்.

அவர்களுக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.