சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி 17 பேர் பலி

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 13 ஆயிரத்து 723 ஆக அதிகரித்துள்ளது. மேலும், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 494 ஆக அதிகரித்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையில் 94 ஆயிரத்து 695 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 78 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு நேற்றுவரை 2,011 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று காலை நிலவரப்படி 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் அரசு மருத்துவமனையில் 14 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 7 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 3 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஒருவரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், தனியார் மருத்துவமனையில் 3 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.