இந்தியாவில் தீவிரம் அடையும் கொரோனா வைரஸ்... ஒரே நாளில் 78,524 பேருக்கு தொற்று உறுதி

உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் பரவல் தற்போது இந்தியாவில் தீவிரம் அடைந்துள்ளது உலகில் வேகமாக வைரஸ் பரவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கடந்த மாதம் தினசரி நோய்த்தொற்று ஒரு லட்சத்தை எட்டிய நிலையில், தற்போது குறையத் தொடங்கி உள்ளது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. உயிரிழப்பும் கடந்த சில தினங்களாக ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு மற்றும் குணமடைந்தவர்கள் விவரத்தை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 லட்சத்தை தாண்டி உள்ளது. மொத்த பாதிப்பு 68,35,656 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 78,524 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 971 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,05,526 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 58,27,705 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 83011 பேர் குணமடைந்துள்ளனர். நேற்றும் புதிய நோய்த்தொற்று எண்ணிக்கையை விட அதிக நபர்கள் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 9,02,425 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.54 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 85.25 சதவீதமாகவும் உள்ளது.