மதுரையில் ஒரே நாளில் 120 பேர் கொரோனாவால் பாதிப்பு

மதுரையில் ஒரே நாளில் 120 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதனால் பாதிப்பு எண்ணிக்கை 14,506 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 990 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 39 ஆயிரத்து 959 ஆக அதிகரித்துள்ளது.

நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 52 ஆயிரத்து 380 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 80 ஆயிரத்து 63 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 516 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் தான் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால் தற்போது மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 14,386 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் மேலும் 120 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,506 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 13,222 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி 360 பேர் உயிரிழந்துள்ளனர்.