மலேசியாவில் அன்வர் இப்ராகிம் பிரதமராக 121 எம்.பி.க்கள் ஆதரிப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்

மலேசியாவில் மலேசிய ஐக்கிய சுதேச கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிரதமர் முகைதீன் யாசின் நடத்தி வருகிறார். முகைதீன் யாசின் ஆட்சிக்கு எதிர்க்கட்சியான மக்கள் நீதிக்கட்சியின் தலைவர் அன்வர் இப்ராகிம் சிம்மசொப்பனமாக உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக அவர் திடீரென முகைதீன் யாசின் ஆட்சி கவிழ்ந்துவிட்டதாக அன்வர் இப்ராகிம் கூறினார்.

மேலும், ன்னிடம் ஆட்சி அமைக்கத்தேவையான பெரும்பான்மை பலம் உள்ளதாக அன்வர் இப்ராகிம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மன்னர் அல்சுல்தான் அப்துல்லாவை சந்தித்து பேசியபோது, அவர் முகைதீன் யாசின் ஆட்சியை மாற்றுவதற்கு ஏற்ற வகையில் தனக்கு பெரும்பான்மை பலம் உள்ளது என கூறியதாக தெரிகிறது.

இந்நிலையில், 121 எம்.பி.க்கள் அன்வர் இப்ராகிம் பிரதமர் ஆவதை ஆதரிப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வைரலானது. இதுகுறித்து போலீசிடம் புகார்கள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து விசாரணையை மலேசிய போலீஸ் முடுக்கி விட்டுள்ளது. அன்வர் இப்ராகிம் தனது ஆதரவாளர்கள் பட்டியலை தருமாறு மலேசிய போலீஸ் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மலேசியாவில் தவறான தகவலை பரப்பினால் அதற்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்க முடியும். அதன்படி, அன்வர் இப்ராகிம் பிரதமர் ஆவதை ஆதரிப்பதாக சமூக வலைத்தளங்களில் பரப்பியவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.