விமான கட்டணங்கள் உயர்வு; பயணிகள் தவிப்பு

விமான கட்டணம் அதிகரிப்பு... சென்னையில் இருந்து, நேற்று(ஜூன் 1) பல்வேறு நகரங்களுக்கு, 24 விமானங்கள் இயக்கப்பட்டன. டிக்கெட் கட்டணம் அதிகரிப்பால் பயணிகள் செய்வது அறியாது, தவித்து வருகின்றனர்.

சென்னையில் இருந்து, டில்லி, கோல்கட்டா, ஐதராபாத், பெங்களூரு, திருவனந்தபுரம், விஜயவாடா, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட, 24 நகரங்களுக்கு, நேற்று விமானங்கள் இயக்கப்பட்டன. அதேபோல, மற்ற நகரங்களில் இருந்து, சென்னைக்கு, 24 விமானங்கள் வந்தன.

சென்னையில் இருந்து நேற்று, 3,100 பேர், பல்வேறு நகரங்களுக்கு பயணித்தனர். பல்வேறு நகரங்களில் இருந்து நேற்று, 1,100பேர் வரை, சென்னை வந்தனர். தற்போது, உள்நாட்டு விமானங்களில், பல்வேறு நகரங்களுக்கு செல்ல, 2,358 ரூபாய் முதல், 29 ஆயிரத்து, 500 ரூபாய் வரை, டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

விமான நிறுவன இணையதளத்தில், குறைந்த பட்ச விலையை தேர்ந்தெடுத்து, டிக்கெட் புக் செய்யும் போது, சாதாரண வகுப்பு டிக்கெட்கள் ஏற்கனவே, முன்பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மீதமுள்ள அதிகபட்ச விலை டிக்கெட்டை, சம்பந்தப்பட்ட நபர் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்.

சென்னையில் இருந்து, டில்லி, கோல்கட்டா, அந்தமான், மதுரை, கோவை, துாத்துக்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு வழக்கத்தை விட, அதிக விலைக்கு, விமான டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. இதனால், பயணிகள் விமானப் பயணம் மேற்கொள்ள தயங்குவதோடு, செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.