பிரேசிலில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18 லட்சத்து 66 ஆயிரத்து 176 ஆக அதிகரிப்பு

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.30 கோடியைத் தாண்டியுள்ளது.

கொரோனா வைரசுக்கு இதுவரை உலகளவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 75.79 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 58 ஆயிரத்து 900-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 5.71 லட்சத்தைக் கடந்துள்ளது.

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 630 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அங்கு பலி எண்ணிக்கை 72,151 ஆக அதிகரித்துள்ளது.

பிரேசிலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 66 ஆயிரத்து 176 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சனிக்கிழமையன்று புதிதாக 39,000 பேர் கொரோனா தொற்று உள்ளாகினர். மேலும் அன்று 1071 பேர் பலியாகினர். கடந்த வெள்ளிக்கிழமையன்று 1,200 பேர் பலியாகியுள்ளனர். பிரேசிலில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 12 லட்சத்து 13 ஆயிரத்து 512 ஆக உள்ளது.

பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் பிரேசில் உள்ளது. இந்தியா 879,487 பாதிப்புகளுடன் 3ம் இடத்தில் உள்ளது.