மேட்டூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,938 கன அடியில் இருந்து 6,957 கன அடியாக அதிகரித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை வட கர்நாடக மாநிலத்தில் தீவிரம் அடைந்ததை அடுத்து, அங்குள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பின. இதையடுத்து இந்த இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி என்ற அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணையும் வேகமாக நிரம்பி வந்தது. பின்னர் மழை குறைந்ததையடுத்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைந்தது.

இந்நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,938 கன அடியில் இருந்து 6,957 கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 96.80 அடியாகவும், நீர்இருப்பு 60.72 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது.

டெல்டா பாசனத் தேவைக்காக காவிரியில் 18,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல், கிழக்கு, மேற்கு கால்வாய்க்கு 600 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.