கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா மாறியுள்ளது. இங்கு மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா மாறியுள்ளது. அமெரிக்காவில் இப்போது வரை, 25.08 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1.25 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை பாதிப்பிலிருந்து, 6,79,308 பேர் மீண்டுள்ளதாக, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் குறிப்பாக ப்ளோரிடா மற்றும் டெக்சாஸ் மாகாணங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அண்மையில் தென் மாகாணங்களில் தளர்த்தப்பட்டன. வணிக நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டது. இதையடுத்து அங்கு, மீண்டும் வேகமாக கொரோனா பரவ துவங்கியுள்ளது.
நேற்று ஒரே நாளில் (27ம் தேதி) மட்டும் ப்ளோரிடா மாகாணத்தில்
கொரோனாவால் 9,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம், 9,000 பேர்
பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிப்பு தொடர்ந்து
அதிகரித்து வருவதால், அந்த மாகாணங்களில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளைக்
கடுமையாக்க அமெரிக்க சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.
கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்காவின் முகமாகவுள்ள மருத்துவர் பவுசி தெரிவித்துள்ளதாவது:
அமெரிக்காவில்
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையிலும் சில மாகாண ஆளுநர்கள் ஊரடங்கு
கட்டுப்பாடுகளில் தளர்வுகளை வழங்கினர். இதனால் தான் இப்போது கொரோனா தொற்று
அதிகரித்திருக்கிறது. இப்போது வரை, 25.08 லட்சம் பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் நெறிமுறைகளை பின் பற்றுவது இல்லை.
இதுவே பிறருக்கு கொரோனா பரவ காரணமாக உள்ளது. ப்ளோரிடாவில் மட்டும் இதுவரை
1.32 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 3,300 பேர் பலியாகி
உள்ளனர். தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்கள் கட்டுப்பாடுகளை தளர்த்தியதை
அடுத்து, அங்கும் கொரோனா பரவல் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் இந்த
மாகாணங்களில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இவ்வாறு
அவர் தெரிவித்துள்ளார்.