தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பரிசோதனை...ஒரே நாளில் 51,640 பேருக்கு பரிசோதனை

தமிழகத்தில் அதி வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 979 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 70 ஆயிரத்து 693 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 50 ஆயிரத்து 294 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 59 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 17 ஆயிரத்து 915 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 78 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 481 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 51 ஆயிரத்து 640 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 55 ஆயிரத்து 817 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் மட்டும் 52 ஆயிரத்து 993 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் மக்களிடம் இருந்து எடுக்கப்பட்ட பரிசோதனை மாதிரிகளின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 32 ஆயிரத்து 492 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு மாநில சுகாதாரத்துறை கூறியுள்ளது.