மின் உற்பத்தி திறனில் உலகளவில் முதல் 5 நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது

புதுடில்லி: பிரதமர் மோடி பெருமிதம்... சூரிய சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின் உற்பத்தி திறனில் உலகளவில் முதல் 5 நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை குறித்த ஜி20 அமைச்சர்கள் மாநாட்டில் காணொலி மூலம் கலந்துகொண்ட பிரதமர் மோடி, வணக்கம் என தமிழில் கூறி உரையை தொடங்கினார்.
2070-ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வை பூஜ்ஜியமாக குறைக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்தார். உலகம் முழுவதும் பிளாஸ்டிக் மாசுவை முடிவுக்கு கொண்டுவர ஜி20 நாடுகள் ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
நாட்டில் புலிகளை பாதுகாக்க நடைமுறையில் உள்ள ப்ராஜெக்ட் டைகர் திட்டத்தின் விளைவாக உலகில் மொத்தமுள்ள புலிகளில் 70 சதவீதம் இந்தியாவில் உள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, ப்ராஜெக்ட் லயன், ப்ராஜெக்ட் டால்ஃபின் போன்ற திட்டங்களிலும் இந்தியா பணியாற்றி வருவதாக தெரிவித்தார்.