பணம் மோசடி வழக்கில் இந்திய வம்சாவளி கிஷனுக்கு சிறை தண்டனை

லண்டன்: பணம் மோசடி வழக்கில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கிஷன் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து அவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த கிஷன் பட் (28) என்பவர் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இவர் அங்கு பலரிடம் போலீஸ் அல்லது வங்கி அதிகாரி போல தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பழகி வந்துள்ளார். குறிப்பாக முதியவர்களை தனது சதி வலையில் வீழ்த்தி வந்தார்.

அப்போது வங்கி கணக்கில் இருந்து அவர்களுக்கே தெரியாமல் தனது வங்கி கணக்குக்கு பணத்தை மாற்றி உள்ளார். அந்த வகையில் சுமார் ரூ.2.45 கோடி வரை மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு லண்டனில் உள்ள ஸ்னாரெஸ்புரூக் கிரவுன் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் கிஷன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டது.