டிஎன்பிஎஸ்சியின் வருடாந்திர காலஅட்டவணை டிசம்பர் 2-வது வாரத்தில் வெளியாக உள்ளதாக தகவல்


சென்னை : தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. பல்வேறு அரசுத் துறைகளில் நிரப்பப்பட உள்ள காலிப் பணியிடங்கள்,

அதற்கான போட்டித் தேர்வு பற்றிய விவரங்கள் அடங்கிய வருடாந்திர கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு கொண்டு வருகிறது. தேர்வர்கள் முறையாக திட்டமிட்டு போட்டித் தேர்வுகளுக்கு தயாராக ஏதுவாக இந்த அட்டவணை வெளியிடப்படுகிறது.

எனவே அதன்படி, 2024-ம் ஆண்டுக்கான போட்டித் தேர்வு, காலிப் பணியிடங்கள் அடங்கிய டிஎன்பிஎஸ்சி-யின் வருடாந்திர கால அட்டவணை வருகிற டிசம்பர் 2-வது வாரத்தில் வெளியிடப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அந்த அறிவிப்பில் 30 விதமான போட்டித் தேர்வுகள் மூலம் சுமார் 15 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கான விவரங்கள் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல், எதிர்பார்ப்பில் உள்ள தேர்வர்களுக்கு மகிழ்ச்சி தருவதாக உள்ளது. இதற்கு முன்னதாக இந்தாண்டு நடத்தப்பட்ட குரூப் 1, குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும்.