திருப்பதி மலைக்கு பெற்றோருடன் நடந்து சென்ற சிறுமி இறந்தது குறித்து விசாரணை

திருப்பதி: சிறுமி பலியான சம்பவம் குறித்து விசாரணை... திருப்பதி மலைக்கு பெற்றோருடன் நடந்து சென்ற 6 வயது சிறுமி கரடி தாக்கி உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

நெல்லூரிலிருந்து பெற்றோருடன் திருப்பதி வந்திருந்த லட்சிதா என்ற சிறுமி, இரவு திருப்பதி மலைக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தபோது, நடைபாதையில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே திடீரென காணாமல் போயுள்ளார்.

எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால், சிறுத்தை இழுத்து சென்றிருக்கலாம் என அச்சமடைந்த பெற்றோர், உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இரவு முழுவதும் போலீசாரும், வனத்துறையினரும் சிறுமியை தேடிய நிலையில், காலை அலிப்பிரிவழி நடைபாதையில் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் பலத்த காயங்களுடன் சிறுமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

உடல் கிடந்த இடத்தில் கரடி நடமாட்டம் இருந்ததற்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளதால், கரடி தாக்குதலில் சிறுமி உயிரிழந்திருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.