கொரோனா வைரஸ் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மாத்திரை அதிக விலைக்கு விற்பனையா ?

கொரோனா வைரஸுக்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. பிற நோய்களுக்கான மருந்துகளே தற்போது சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த மருந்துகள் சோதனை அடிப்படையிலே கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகின்றன.

தற்போது, பிரபல மருந்து நிறுவனமான கிளென்மார்க் நிறுவனத்தின் பேபிபுளூ என்ற மாத்திரை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்தது. இது கடந்த மாதம் 20-ந்தேதி முதல் விற்பனைக்கு வந்துள்ளது. தற்போது இந்த மருந்து அதிக விலைக்கு விற்கப்படுவதாககூறி இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் புகார் செய்துள்ளார்.

இந்நிலையில் இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி வி.ஜி சோமானிக்கு கிளென்மார்க் நிறுவனம் இதுகுறித்து விளக்கமளித்துள்ளது. அதில், பிற மருந்துகளுடன் ஒப்பிடும்போது, எங்களது பேபிபுளூ மிகவும் சிக்கனமானதும், பயனுள்ளதும் ஆகும். எங்கள் மாத்திரை ஒன்றின் விலை ரூ.75. இது ரஷியாவில் ரூ.600, ஜப்பானில் ரூ.378, வங்காளதேசத்தில் ரூ.350, சீனாவில் ரூ.215 ஆகும். ஏற்கனவே ஒரு மாத்திரை ரூ.103-க்கு விற்கப்பட்டது. அதை ரூ.75 ஆக குறைத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சிறப்பான உற்பத்தியையும், சிறப்பான பலனை அடைவதற்காகவும் விலை குறைப்பு சாத்தியமானது. பேவிபிராவிர் மாத்திரை, கொரோனா வைரசுடன் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை உடையவர்களுக்கு ஏற்றது என்று கூறவில்லை. பேவிபிராவிர் மட்டும்தான் லேசான, மிதமான கொரோனா பாதிப்புக்கான பயன் அளிக்கும் மருந்து என்றும் குறிப்பிடவில்லை என கிளென்மார்க் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.