கொரோனாவால் இறந்தவர் உடலை சைக்கிள் ரிக்‏ஷாவில் கொண்டு சென்ற அவலம்

ஆம்புலன்ஸ் வருவதற்குள் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர் உடலை அவரது குடும்பத்தினரே இடுகாட்டுக்கு சைக்கிள் ரிக்‏ஷாவில் கொண்டு சென்ற அவலம் நடந்துள்ளது.

குண்டூர் மாவட்டம் பபட்லா பகுதியைச் சேர்ந்த 68வயது முதியவர் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைக்காக நேற்று காலை பபட்லா அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால் அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லாமல், பபட்லாவிலேயே இறுதிச் சடங்கு நடத்த குடும்பத்தார் முடிவு செய்தனர். அவரது உடலை எடுத்துச் செல்ல மருத்துவமனை சார்பில் ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

ஆனால், அவரது குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல், சைக்கிள் ரிக்‏ஷாவிலேயே இடுகாட்டுக்கு உடலை எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால், உடலை சைக்கிள் ரிக்‏ஷாவில் கொண்டு செல்வது என்ற முடிவை அந்த குடும்பத்தினரே எடுத்துள்ளனர் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.