உரிமைத் தொகை திட்டத்தில் மேலும் 7.35 லட்சம் பயனாளிகள் இணைந்துள்ளதாக தகவல்

சென்னை: தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உரிமை தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2 மாதங்கள் உரிமை தொகை வழங்கப்பட்டு உள்ள நிலையில் இந்த திட்டத்திற்கு தகுதி இருந்தும் உரிமை தொகை கிடைக்காத பெண்கள் மேல்முறையீடு செய்வதற்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதற்கு முன்னதாக 1 கோடியே 6 லட்சம் பெண்கள் இத்திட்டத்தில் பயனடைந்து வரும் நிலையில் மேல்முறையீடு செய்யப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் நடப்பு மாதம் கூடுதலாக 7.35 லட்சம் பெண்கள் பயனடைந்து உள்ளனர்.


இதையடுத்து இவர்களுக்கு உரிமைத் தொகை வழங்குவதற்கான விழா கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்தது. இதில் முக்கிய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். எனவே இதன் மூலமாக உரிமை தொகை திட்டத்தில் தற்போது 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பயனாளிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்முறையீடு செய்யும் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் காரணத்தினால் வரும் மாதங்களில் பயனாளிகளின் எண்ணிக்கை உயரலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.