இந்தியாவில் தேடப்படும் தீவிரவாதிகள் பயிற்சி பெற சீனா சென்றதாக தகவல்

சீனாவில் பயிற்சி பெற்ற தீவிரவாத தலைவர்கள்... இந்தியாவால் அதிகம் தேடப்படும் நாகா பழங்குடியின 3 தீவிரவாத தலைவர்கள் உள்ளிட்ட 4 தீவிரவாத தலைவர்கள், பயிற்சிக்காகவும், ஆயுத உதவிக்காகவும் சீனாவுக்கு அக்டோபர் மாதம் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவின் குன்மிங் பகுதிக்கு 4 தீவிரவாத தலைவர்களும் சென்று சீன ராணுவ அதிகாரிகளையும், இருதரப்புக்கும் மத்தியஸ்தராக செயல்படும் நபரையும் சந்தித்ததாக இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சீனாவால் ஆதரிக்கப்படும் மியான்மரிலுள்ள யூனைடெட் வா ஸ்டேட் ஆர்மி (United Wa State Army), அரகான் ஆர்மி (Arakan Army) ஆகிய 2 தீவிரவாத குழுக்கள், வடகிழக்கு இந்தியாவில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆயுத சப்ளை செய்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லை பிரச்னையில் மோதல் உருவாகி தற்போது மெல்ல மெல்ல சகஜ நிலை திரும்பி வரும் நிலையில் இப்படிப்பட்ட ஒரு தகவல் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.