ஏப்ரலிருந்து அத்தியாவசிய மருந்து விலை அதிகரிக்க இருப்பதாக தகவல்

இந்தியா: உலகளவில் உள்ள நாடுகளில் இந்தியாவில் தான் அதிகப்படியான மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டு, பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில் இந்தியாவில் விற்கப்படும் அத்தியாவசிய மருந்துகளின் விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் கண்காணித்து வரைமுறை செய்கிறது.

இந்த நிலையில் தற்போது மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு, உற்பத்தி செலவினம் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் மருந்துகளின் விலையை உயர வேண்டும் என்று மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கோரிக்கை வைத்து வருகின்றன.

இந்நிலையில் அரசு அந்த கோரிக்கையை ஏற்று சில மருந்துகளின் விலையை உயர்த்த அனுமதி வழங்கி இருக்கிறது. அதன் படி அத்தியாவசியமாக பயன்படுத்தப்படும் வலி நிவாரணிகள், இதய நோய் மருந்துகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் ஆகியவற்றின் விலை வருகிற ஏப்ரல் முதல் அதிகரிக்க மருத்துவ நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.

மேலும் காய்ச்சல், தோல் நோய்கள், தொற்றுகள், ரத்த சோகை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் 800 அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7 சதவிகிதம் உயரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.