யாழ்.மீனவர்கள் கடற் தொழிலுக்கு செல்வதை தவிர்க்கின்றனர்

கடற் தொழிலுக்கு செல்வதை தவிர்க்கும் மீனவர்கள்... போதிய சந்தை வாய்ப்பின்மையால் யாழ்.மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்வதனை தவிர்த்து வருகின்றனர் என கடற்தொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “குடாக்கடலில் கடற்தொழிலுக்கு செல்லும் 50 சத வீத மீனவர்கள் தொழிலுக்கு செல்வதனை தவிர்த்து வருகின்றனர். கொரோனோ தொற்றுக் காரணமாக தென்பகுதிக்கு கடலுணவு ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் பிடிபடும் கடலுணவுகள் போதிய சந்தை வாய்ப்பின்றி தேங்கி காணப்படுகின்றன.

அதனால் உள்ளூர் சந்தைகளில் நண்டு, இறால், கணவாய் போன்றவை கிலோ 400 ரூபாய்க்கும் குறைவாக விற்பனை செய்யப்படுகின்றது. அதேவேளை தென்பகுதியில் மீன் சந்தையில் இருந்து கொரோனோ தொற்று ஏற்பட்டமையால் மக்கள் கடலுணவை கொள்வனவு செய்ய தயக்கம் காட்டி வருவதனாலும் உள்ளூர் சந்தைகளில் கடலுணவுக்கான கேள்வியும் குறைவடைந்துள்ளது.

அதனால் சந்தைகளில் விற்பனை குறைவடைந்துள்ளது. இவ்வாறான காரணங்களால் தொழிலுக்கு செல்வதற்கு மீனவர்கள் விரும்பாது தவிர்த்து வருகின்றனர் என தெரிவித்தார்.