பனிப்பொழிவு காரணமாக, மல்லிகைப்பூ விலை அதிரடி உயர்வு

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மல்லிகைப்பூ சாகுபடி செய்து செடிகளை வளர்த்து வருகின்றனர்.

இங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஏலம் முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், கோவை திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

தற்போது இந்த பகுதிகளில் நிலவும் அதிகமான பனிப்பொழிவு காரணமாக, மல்லிகைப் பூக்களின் வரத்து குறைந்தது. கடந்த வாரம் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்து மல்லிகைப்பூ அதிகபட்சமாக கிலோ ரூ.3132க்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்று பூ மார்க்கெட்டுக்கு குறைந்த அளவிலேயே மல்லிகைப்பூக்கள் வந்ததால் மல்லிகைப்பூ விலை கிலோ 3700 ரூபாயை எட்டியது. இதனால் மல்லிகைப்பூ சாகுபடி செய்யும் விவசாயிகள் மற்றும் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.