ஓய்வுபெற்ற என்ஜினீயர் வீட்டில் நூதனமான முறையில் நகை பணம் கொள்ளை

திருச்சி மாவட்டம் பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 75). இவர், நெடுஞ்சாலைத்துறையில் என்ஜினீயராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். சுப்பிரமணியன் தனது மனைவியுடன் திருச்சியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த 10-ந்தேதி, சுப்பிரமணியன் வீட்டிற்கு மாநகராட்சி இளநிலை பொறியாளர் எனக்கூறி ஒருவரும், அவருக்கு உதவியாளர் என்ற நிலையில் ஒருவரும் என 2 பேர் வந்தனர். சுப்பிரமணியனிடம், வீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதை வடிகால் இணைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

இதனையடுத்து அவர்களை வீட்டிற்குள் அனுமதித்துள்ளனர். வீட்டினுள் கழிவறை உள்ளிட்ட சில இடங்களில் சென்று ஆய்வு மேற்கொண்ட அந்த நபர்கள் எல்லாம் சரியாக உள்ளது எனக் கூறிச்சென்றுள்ளனர்.

பின்னர் 12-ந்தேதி ஏதேச்சையாக கவனித்தபோது, வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் வீட்டின் கதவுகள், பூட்டுகள் எதுவும் உடைக்கப்படவும் இல்லை. இதனையடுத்து தாங்களை நூதனமான முறையில் ஏமாற்றிய நபர்கள் நகை மற்றும் ரொக்கத்தை கொள்ளையடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அவர் போலீசில் நேற்று புகார் அளித்தார்.

அதன்பேரில் புத்தூர் அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் சந்தேகப்படும் நபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்றும் போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.