கமல்ஹாசன் 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்

தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் ஐந்து மாதத்தில் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. இதேபோல் ‘‘சீரமைப்போம் தமிழகத்தை’’ என்ற முழக்கத்துடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது முதல்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை மதுரையில் கடந்த 13-ம் தேதி தொடங்கினார். அங்கிருந்து தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தனது முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவு செய்தார்.

இதையடுத்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கினார். அதன்படி விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பொதுமக்கள் மத்தியில் இன்று மாலை கமல்ஹாசன் பிரச்சாரம் செய்கிறார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு கமல்ஹாசன் திருவண்ணாமலைக்கு சென்று பிரச்சாரம் செய்கிறார்.

நாளை காலை 9.00 மணிக்கு விழுப்புரம் மாவட்டத்தில் கண்டாச்சிபுரம் கூட்டுரோட்டிலும், 11.00 மணிக்கு விழுப்புரம் யோகலட்சுமி மஹாலிலும் பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய உள்ளார். இதையடுத்து மதியம் 2.30 மணிக்கு கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகர பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி மக்களிடையே உரையாற்றுகிறார்.

தொடர்ந்து மதியம் 3.00 மணிக்கு கடலூர் சுப்புராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் கடலூர் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அதனை தொடர்ந்து மாலை 5.00 மணிக்கு மீண்டும் விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டு ஓட்டல் கிராண்ட் செரினாவிலும், மாலை 6.00 மணிக்கு திண்டிவனம் ஐஸ்வர்யா பவனிலும் உரையாற்றுகிறார்.