ரேசன் கடைகளில் வரும் அக்டோபர் 1-ந் தேதி முதல் மண்ணெண்ணெய் விலை உயர்வு

ரேசன் கடைகளில் மண்ணெண்ணெய் விலை அக்டோபர் மாதம் முதல் உயர்த்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் கூறியதாவது:-

சென்னை ஐகோர்ட்டின் உத்தரவின் அடிப்படையில், மண்ணெண்ணெய் மொத்த வணிகர்களின் ஆதாய விளிம்புத் தொகை மற்றும் போக்குவரத்து கட்டண ஆதாய விளிம்புத் தொகை ஆகியவை உயர்த்தி வழங்கப்பட்டதன் அடிப்படையில், மண்ணெண்ணெய் சில்லரை விற்பனை விலையை உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

எண்ணெய் நிறுவனங்களால் பொதுவினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மண்ணெண்ணெய் விற்பனை விலையை உயர்வு செய்து ஆணையிடப்பட்டது.

அதன்படி, சென்னை மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் ரேசன் கடைகளில் வரும் அக்டோபர் 1-ந் தேதி முதல், ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெயின் சில்லரை விற்பனை விலையை லிட்டருக்கு குறைந்தபட்சமாக ரூ.15 முதல் அதிகபட்சமாக ரூ.16.50 வரை உயர்த்தி விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போது ரேசன் கடைகளில் மண்ணெண்ணெய் லிட்டர் ரூ.13.70 என்று விற்பனை செய்யப்படுகிறது. தற்போதுள்ள உத்தரவுப்படி, அக்டோபர் முதல் அதன் விலை லிட்டருக்கு ரூ.1.30 முதல் ரூ.2.80 வரை உயர்கிறது.