சித்ரா தற்கொலை விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்; அமைச்சர் தகவல்

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக விவகாரத்தில் யார் தவறு செய்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் உறுதியளித்துள்ளார்.

சித்ராவிற்கு வாட்ஸ் அப் வாயிலாக அரசியல் பிரமுகர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக எழுந்த தகவலை அடுத்து அமைச்சர் இவ்வாறு தெரிவித்ததாக தெரிய வருகிறது. டான்சர், பாடகி, தொகுப்பாளர், நடிகை என பல திறமைகளை கொண்டவர் தான் விஜே சித்ரா. எப்பொழுதும் முகத்தில் சிரிப்பு குறையாதபடி அனைவரிடமும் பாசிட்டிவ்வாக பழக கூடியவர்.

இந்நிலையில் செவ்வாய் கிழமை அதிகாலை 3.30 மணியளவில் நட்சத்திர ஓட்டலில் சின்னத்திரை சித்ரா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை எழுப்பியுள்ளது. இது குறித்து பல அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்தன.

சிலர் இது திட்டமிட்டு செய்த கொலையாக கூட இருக்கலாம் என்று ரேகா நாயர் மற்றும் ஷாலு ஷம்மு போன்ற நடிகைகள் துணிச்சலாக கூறி இருந்தனர். இந்நிலையில் நேற்று கீழ்பாக்கம் உள்ள மருத்துவமனையில் சித்ரா உடல் பிரேத பரிசோதனை நடந்து முடிந்தது.

இதில் சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டுள்ளார் என்றும் அவரின் முகத்தில் இருந்த காயங்கள் யாவும் அவருடைய நகத்தால் உண்டான கீறல் தான் என்று ரிப்போர்ட் வந்துள்ளது. போலீசின் முதற்கட்ட விசாரணையில் தற்கொலை என்று முடிவாகியுள்ளதால் இவரின் தற்கொலைக்கு பின் யார் காரணம் என்ற கோணத்தில் அடுத்த கட்ட விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே இவரது தற்கொலைக்கு பின்னணியில் அரசியல் பிரமுகர் உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் சித்ரா தற்கொலை தொடர்பாக பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இந்த விவகாரத்தில் யார் தவறு செய்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.