பெண்களின் திருமண வயது குறித்து முஸ்லிம் பெண்கள் அமைப்பு பிரதமருக்கு கடிதம்

பிரதமருக்கு கடிதம்... பெண்களின் திருமண வயதை உயர்த்தக்கூடாது என முஸ்லிம் பெண்கள் அமைப்பு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.

இது தொடர்பாக, பிரமதர் மோடிக்கு, இந்திய முஸ்லிம் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவின் செயலாளர் பி.கே.நூர்பனா ரஷீத் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: வளரும் நாடுகள் பலவும் பெண்களின் திருமண வயதை 21-லிருந்து 18 ஆகக் குறைத்துள்ளன என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள். அப்படி இருக்க இந்தியாவில் மட்டும் பெண்களின் திருமண வயதை உயர்த்துவது சரியான நடவடிக்கையாக இருக்க முடியாது.

மேலும், பெண்களின் திருமண வயதை அதிகரிப்பதன் மூலம், திருமணம் செய்துகொள்ளாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதற்கும், சட்டவிரோத உறவுகளுக்குமே வழிவகுக்கும். குழந்தை திருமண தடை சட்டத்தை அமல்படுத்துவதற்கு பதில் சட்டபூர்வ திருமண வயதை அதிகரிப்பது தவறான செயலாக பார்க்கிறோம்.

கிராம பகுதிகளில் 30 சதவீத பெண்களுக்கு 18 வயதுக்கு முன்பே திருமணம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திருமண வயதை நமது நாட்டில் மட்டும் அதிகரிப்பதன் மூலம் பெண்களின் இன்னும் நிலை மோசமாகும் என சுட்டிக்காட்ட நான் கடமைப்பட்டுள்ளேன்.

எனவே, பெண்களின் திருமண வயதை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.